ஏணிபெண்டா - அகநள்ளி

    அமைவிடம் - ஏணிபெண்டா - அகநள்ளி
    ஊர் - ஏணிபெண்டா
    வட்டம் - தேன்கனிக்கோட்டை
    மாவட்டம் - கிருஷ்ணகிரி
    வகை - புதிர்நிலை
    கிடைத்த தொல்பொருட்கள் - புதிர்நிலை கல்வட்டங்கள்
    பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
    விளக்கம் -

              முட்டை வடிவில் அமைந்துள்ள ஏணிபெண்டா - அகநள்ளி புதிர்ப்பாதை, ஏழு சுற்றுப்பாதைகள் கொண்ட செம்மை வடிவமாகும். மக்கள் வழக்கில் இதனை ஏழு சுற்றுக்கோட்டை என்று பொருள்படியாக, 'ஏழுசுத்துக்கோட்டை' என மருவி அழைக்கின்றனர். இதன் நுழைவாயில் கிழக்கு திசையை நோக்கி அமைந்துள்ளது.

             இயற்கையாகக் கிடைக்கும் குண்டுக் கற்கள் மற்றும் பலவடிவ துண்டுக் கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட இச்சின்னம், கிழக்கு மேற்காக 8 மீட்டரும் (25.10 அடி), வடக்குத் தெற்காக 9.2 மீட்டரும் (29.09 அடி), பாதையின் அகலம் 45 முதல் 50 செ.மீ. அளவு கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுப்பாதையின் கற்கள் சில விலகியிருப்பதால், அவ்விடங்களின் அளவு மாறுபடுகின்றது. இதன் மையப் பகுதியானது, சிறு பலகைக்கற்கள் கொண்டு மூடுபலகை கொண்ட சிறு கல்திட்டை அல்லது அறை போன்ற அமைப்பு கொண்டதாக விளங்குகிறது. அகல்விளக்குகள் வைத்து வழிபட இந்த அமைப்பு அமைக்கப்பட்டதாக இருக்கலாம். இது, மு.பொ.ஆ.500 அளவினதாக, அதாவது இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதலாம். இக்காலகட்டம், பெரும் கற்படைப் பண்பாட்டின் மத்திய காலகட்டத்தைச் சார்ந்து அமைகிறது. இச்சின்னம் அமைந்துள்ள பகுதிக்கு 1 கி.மீ தொலைவில், கல்வட்டம் மற்றும் கல்குவி, கல்வட்ட வகை பெருங் கற்படைச் சின்னங்கள் அமைந்துள்ளதும் கவனிக்கத்தக்கதாகும்.

    ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - திரு.சுகவனமுருகன்
    சுருக்கம் -

             ஏணிபெண்டா - அகநள்ளி புதிர்ப்பாதை, ஏழு சுற்றுப்பாதைகள் கொண்ட முட்டை வடிவமாகும். இவ்வரிய புதிர்நிலை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஏழாவது புதிர்நிலையாகும். இது மூன்றுவகைப் புதிர்நிலைகளில் முதல்வகையைச் சேர்ந்தது. கம்பையநல்லூர் புதிர்நிலை செவ்வக வடிவுடையது. குந்தாணி புதிர்நிலை சுருள் வடிவப் பாதை கொண்டது. ஏணிபெண்டா புதிர்நிலை முதல் வடிவான வட்டப்புதிர்நிலை ஆகும். இதன் வாய்ப்பகுதி 3.5 மீ. உள்ள சமபக்க முக்கோணம் என்பதே இதன் சிறப்பாகும்.