பல்லாவரம்

அமைவிடம் - பல்லாவரம்
ஊர் - பல்லாவரம்
வட்டம் - தாம்பரம்
மாவட்டம் - சென்னை
வகை - கைக்கோடரி
கிடைத்த தொல்பொருட்கள் - கைக்கோடரிகள்
பண்பாட்டுக் காலம் - தொல்பழங்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

இராபர்ட் புரூஸ் பூட் மற்றும் வில்லியம் கிங்

விளக்கம் -

தமிழக தொல்லியல் ஆய்வுகளில், சென்னை பல்லாவரத்தில் கண்டெடுக்கப்பட்ட கற்காலக்கருவிகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. 1863, மே, 31ம் தேதி அன்று, சென்னையை அடுத்த பல்லாவரத்தில், இராபர்ட் புரூஸ் புட் அகழாய்வு செய்தார். அடிப்படையில் மண்ணியல் ஆய்வாளரான அவர், தனது துறை தொடர்பாகவே, அகழாய்வு செய்தார். அங்கு, வேட்டையாடுவதற்கும், பிற காரியங்களுக்கும் பயன்படுத்தப்படும், கைக்கோடரி அவரால் கண்டெடுக்கப்பட்டது. இதுவே, தெற்காசிய ஆய்வுகளில், முதன் முதலில் கண்டெடுக்கப்பட்ட, கைக்கோடரி. இராபர்ட் புரூஸ் புட்டுக்கு, அவருடைய நண்பர் வில்லியம் கிங், துணையாக இருந்தார். ராபர்ட் புரூஸ் பூட், தென் இந்தியத் தீபகற்ப பகுதியில் கண்டுபிடித்த, 459 வரலாற்றுக்கு முற்பட்ட காலப் பகுதிகளில், 42 பகுதிகள் பழைய கற்காலத்தையும், 252 பகுதிகள் புதிய கற்காலத்தையும் சார்ந்தவை. திருநெல்வேலி மாவட்டத்தில், தேரி பகுதிகளில் நுண்கற்காலக் கருவிகளை கண்டெடுத்து, அப்பகுதியில் நுண்கற்கால தொழிற்சாலை இருந்தமையை (Post Acheulean Industry) உறுதிப்படுத்தியுள்ளார். ஆதியிலேயே நுண்கற்கால தொழிற்சாலை அமைத்து ஆயுதம் தயாரித்தவன் ஆதித்தமிழன் என்பது பெருமைக்குரியது. ராபர்ட் புரூஸ் பூட் பழைய கற்கால, புதிய கற்கால கல் ஆயுதங்களை, அதன் உருவமைப்பு மற்றும் தொழில் நுட்ப முறையைக் கொண்டு வகைப்படுத்தும் பணியை மேற்கொண்டார். தென் இந்தியாவில் பழைய கற்காலத்திற்கும், புதிய கற்காலத்திற்கும் இடையேயுள்ள நீண்ட இடைவெளியைக் கண்டறிந்து, அதற்கான காரணத்தை அறியும் பொருட்டு மேற்கொண்ட அவரது ஆய்வு சிறப்பு வாய்ந்தது. சென்னை, மைசூர், ஐதராபாத், பரோடா பகுதிகளில், இவரால் சேகரிக்கப்பட்ட வரலாற்றுக்கு முற்பட்ட தொல் பொருட்கள், 1904ல், சென்னை அருங்காட்சியத் துறையால் வாங்கப்பெற்று, அதற்கென தனி காட்சியறை, தொல்லியல் பிரிவில் நிறுவப்பட்டது. அறிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்ந்து, பல தொல்லியல் சிக்கல்களுக்கு தீர்வு கண்டு, "இந்திய தொல் பழங்காலத்தின் தந்தை' என்றழைக்கப் பட்ட ராபர்ட் புரூஸ் பூட், டிச.,29, 1912ல், இயற்கை எய்தினார். இந்திய நாகரிக வரலாற்றை, லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென, முதன் முதலில் உலகுக்கு காட்டிய பெருமை இவரையே சாரும். தற்காலத்தில் இங்கு களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது சில இடங்களில் உடைந்த நிலையில் முதுமக்கள் தாழி கிடைத்தது. அம்பேத்கர் விளையாட்டு திடல் பகுதியில் ஆய்வு செய்ததில் சுடு மணலால் செய்யப்பட்ட பழங்கால முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. ஒன்றரை அடி அகலம், 6 அடி நீளமும் கொண்ட தாழியின் அடிப்பகுதியில் 1 அடியில் 12 கால்கள் மணலால் செய்யப்பட்டிருந்தன.

ஒளிப்படம்எடுத்தவர் - மத்தியத் தொல்லியல் துறை
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

இராபர்ட் புரூஸ்புட் என்ற நிலவியல் ஆய்வாளர் 1863ல் சென்னையில் பல்லாவரம் அருகே சில கற்கருவிகளைக் கண்டெடுத்து, இவை கற்கால மக்களின் ஆயுதங்கள் என்று கருத்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து உள்நாட்டு ஆய்வாளர்களும் களஆய்வு மேற்கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டனர். புரூஸ்புட், பர்கிட், எச்.டி. சங்காலியா, வி.டி. கிருஷ்ணசாமி போன்ற பலர் இப்பணியில் ஈடுபட்டனர். இவை பழைய கற்காலத்தைச் சார்ந்தவை என்பது தெரியவருகின்றன. இதற்கு முன்னர் குடியம் குகைப்பகுதியில் சுமார் 30 இடங்களில் கல்லாயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்லாயுதங்கள் செய்யும் தொழிற்பட்டறைகளும், வாழ்விடங்களும் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை.