முகப்பு ஓவியங்கள் சுவரோவியங்கள் திருப்பருத்திக்குன்றம்
அமைவிடம் | - | திருலோக்கியநாதர் கோயில், மகா மண்டப விதானம் |
ஊர் | - | திருப்பருத்திக்குன்றம் |
வட்டம் | - | காஞ்சிபுரம் |
மாவட்டம் | - | காஞ்சிபுரம் |
ஓவியம் இருப்பிடம் | - | திருலோக்கியநாதர் கோயில் |
ஓவியத்தின் பெயர் | - | சமணத் தீர்த்தங்கரர் வாழ்க்கை நிகழ்வுகள் |
ஓவியத்தின் வகை | - | சுவரோவியம் |
வண்ணம் | - | சிவப்பு, கருப்பு, வெள்ளை, மஞ்சள் |
ஆட்சி ஆண்டு | - | கி.பி.14-ஆம் நூற்றாண்டு மற்றும் 17-ஆம் நூற்றாண்டு |
விளக்கம் | - | பல்லவர்கள் காஞ்சியை தலைநகரமாக கொண்டு ஆட்சி நடத்திய போது திருப்பருத்திக்குன்றம்,ஒரு முக்கியமான சமணத் தலமாக இருந்தது. இங்கு திரிலோக்கியநாதார் மற்றும் சந்தரபிரபர் எனும் இரண்டு முக்கிய கோயில்கள் உள்ளன. இவ்விரண்டு கோயில்களிலும், பல்லவர், சோழர் மற்றும் விஜயநகர மன்னர்கள் காலத்துக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. திரிலோக்கியநாதர் கோயில் பல்லவர் காலத்தில் எழுப்பப்பட்டு பின்னர் சோழர் மற்றும் விஜயநகர மன்னர்கள் காலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இங்கு விஜயநகர காலத்தில் சங்கம வம்சத்து மன்னர் புக்கராயரின் தலைமை அமைச்சர் இருகப்பா என்பவரால் கி.பி.14 ம் நூற்றாண்டு சங்கீத மண்டபம் எழுப்பப்பட்டு அதன் விதானங்களில் சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஆரம்ப கால ஓவியங்கள் :- இக்காலக் கட்டத்தில் வரைந்த பெரும்பாலன ஓவியங்கள் மறைந்து போயுள்ளன. இருப்பினும் சில இடங்களில் ஓவியங்கள் அடையாளம் காணும் அளவிற்கு எஞ்சியுள்ளன. இதில் வர்த்தமான மகாவீரரின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள், அவரது தாயார் பிரியகாமினி கர்ப்பமாக இருந்தது, சதுர்மேந்திரர் தலைமையில் நடக்கும் தீர்த்தங்கரர்களின் பிறப்புச் சடங்குகள் போன்றவை குறிப்பிடத்தக்க ஓவியங்களாகும். இவ்விதானத்தின் பிற பகுதிகள் கதைகள் ஏதுமின்றி சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ண அலங்கார வேலைப்பாடுகளால் நிரப்பப்பட்டுள்ளது. பிற்கால ஓவியங்கள் இம் மண்டபத்தில் உள்ள பெருபாலன ஓவியங்கள் வரைவு யுத்திக் கொண்டு 17 ம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் வரைந்திருக்ககூடும் எனக் கருதப்படுகின்றது. இங்குள்ள முதல் தளத்தில் வடக்குப் பக்கத்தில் ரிஷபநாதருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் வரையப்பட்டுள்ளன. இக் கதையின் சில பகுதிகள் இரண்டாம் தளத்திலும் காணப்படுகின்றது. பெரும்பாலன காட்சிகள் வலது புறம் இருந்து இடது புறமாக செல்கிறது, சில இடங்களைத் தவிர. இங்கு ஏழு ஓவியத்தொகுதிகளில் ரிஷபதேவரின் முந்தைய பிறப்பில் நடந்த வெவ்வேறு சம்பவங்களும், மற்றவற்றில் தீர்த்தங்கரராய் மாறிய பின் நிகழ்ந்த சம்பவங்களும் வரையப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து 24 வது தீர்த்தங்கரரான மகாவீரரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் வரையப்பட்டுள்ளன. ரிஷபதேவர் மற்றும் மகாவீரரின் உருவங்கள் வேறுபாடின்றி ஒரே சாயலில் காணப்படுகின்றன. தாழ்வாரப் பகுதியில் இருக்கும் பல ஓவியங்கள் அழிந்த நிலையில் உள்ளன. காட்சிகள் 14 ஓவியத் தொகுதிகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும், மனிதர்கள் மற்றும் வானுலக பெண்கள் குடை மற்றும் கொடிகளை ஏந்திச்செல்வதாக உள்ளது. மேலும், இங்கு 22 வது தீர்த்தங்கராகிய நேமிந்நாதர் மற்றும் கிருஷ்ணர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அதிக அளவில் மண்டபத்தின் தெற்குப் பகுதியில் வரையப்பட்டுள்ளன. இம் மண்டபத்தில் பெரும்பாலான ஓவியங்கள் சிதிலமடைந்துள்ளது, இருப்பினும் அங்கு காணப்படும் தமிழ் விளக்க குறிப்புகளின் உதவியுடன் வரையப்பட்ட காட்சிகளில் சில அடையாளம் காணும்படி உள்ளது. |
ஒளிப்படம் எடுத்தவர் | - | க.த.காந்திராஜன் |
சுருக்கம் | - | திருப்பருத்திக்குன்றத்தில் உள்ள ஓவியங்கள் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் வரையப்பட்டவையாகும். முதலாவது 14 ஆம் நூற்றாண்டையும், இரண்டாவது 17ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகின்றது. முதலாவது வகையில் ஓவியங்கள் தனித்தனிக் காட்சியாக உள்ளது இரண்டாவது வகையில் ஓவியங்கள் தொடர் காட்சியாக நீண்ட விளக்கமாக காட்டப்பட்டுள்ளது. |
குறிப்புதவிகள் | - |
|