கோவலன் பொட்டல்

அகழாய்விடத்தின் பெயர் - கோவலன் பொட்டல்
ஊர் - பழங்காநத்தம்
வட்டம் - மதுரை
மாவட்டம் - மதுரை
வகை - பெருங்கற்காலம்
காலம் - கி.மு.2 முதல் கி.பி.3-ஆம் நூற்றாண்டு
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் - 1981
அகழாய்வு தொல்பொருட்கள் - மதுரை கோவலன்பொட்டல் என்ற இடத்தில் நடைபெற்ற அகழாய்வில் சங்க காலப் பாண்டியரின் சதுர வடிவச் செப்புக் காசு ஒன்றும் வெண்மையான இதய வடிவ மணி ஒன்றும் தமிழி எழுத்துப் பொறிப்புள்ள மட்கலன்கள் இரண்டும் மனிதனின் எ
அகழாய்வு மேற்கொண்ட நிறுவனம்/ நபர் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
விளக்கம் -

மதுரை பழங்காநத்தத்தில் மிக அருகில் கோவலன்பொட்டல் என்ற இடத்தில் நடைபெற்ற அகழாய்வில் சங்க காலப் பாண்டியரின் சதுர வடிவச் செப்புக் காசு ஒன்றும், வெண்மையான இதய வடிவ மணி ஒன்றும் தமிழி எழுத்துப் பொறிப்புள்ள மட்கலன்கள் இரண்டும் மனிதனின் எலும்புக்கூடும் கிடைத்துள்ளன. சிலப்பதிகார நாயகன் கோவலன் இந்த இடத்தில் வெட்டப்பட்டதால் இப்பெயர் இவ்விடத்திற்கு வழங்குவதாகச் செவி வழிச் செய்தி நிலவுகிறது. இந்த இடத்தில் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை 1981-இல் அகழாய்வு நடத்தியது. அவ்வாய்வின் பயனாகப் பெருங்கற்கால முதுமக்கள் தாழிகள் சில வெளிக்கொணரப்பட்டன. இன்றும் இப்பகுதி ஈமக்காடாகவே காட்சியளிக்கின்றது.

ஒளிப்படம்எடுத்தவர் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
சுருக்கம் -

கோவலன் பொட்டல் எனும் இடம் மதுரையின் பழங்காநத்தம் பகுதியில் அமைந்துள்ளது. 1980 ஆம் ஆண்டு இங்கு தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையினரால் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது. அகழ்வாராய்ச்சியில் முதுமக்கள் தாழிகள், சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மனித எலும்புக்கூடு, சங்ககாலச் செப்புக்காசு ஆகியவை கண்டெடுக்கப்பட்டது. சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகியின் கணவன் கோவலன் மீது, பாண்டிய மன்னனின் பட்டத்தரசி கோப்பெருந்தேவியின் கால் சிலம்பினை திருடியதாக வீண் பழி சுமத்தப்பட்டதை தீர விசாரணை செய்யாத பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், கோவலனின் தலையை வெட்ட ஆணையிட்டான். மதுரை பழங்காநத்தம் பகுதியில் அமைந்த பொட்டலில் கோவலனின் தலை வெட்டப்பட்டதால், பிற்காலத்தில் அவ்விடம் கோவலன் பொட்டல் என்றாயிற்று என்று கூறப்படுகிறது. கோவலன் பொட்டல் சென்றால் சில ஆயிரம் ஆண்டு பழமையான அந்தப் பாண்டங்களின் உடைந்த சில்லுகளைக் காணலாம், சற்று தோண்டினால் எலும்புகள் நிறைந்த முழுப் பாண்டங்களும் கிடைக்கலாம். இந்தக் கோவலன் பொட்டலில் இருந்து என்னைப் போன்ற சிறுவர்களினால் உடைக்கப் படாத சில முழுமையான மண் தாழிகளை பாதுகாப்பாக எடுத்து மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள ம்யூசியத்தில் பார்வைக்காக வைத்திருக்கிறார்கள்.

குறிப்புதவிகள் -
  1. B.Sasisekaran , S.Rajavel , ‘Adichanallur: A Prehistoric Mining Site’, Indian Journal of History of Science, 2010. 
  2. T.S.Subramanian, ‘Unearthing a great past’ Frontline, Vol.22, 2005. 
  3. Michel Danino, ‘Vedic Roots of Early Tamil Culture’, Saundaryashrih, Archaeological Studies in the New Millennium, 2008. 
  4. Kenneth A.R.Kennedy, ‘The physical anthropology of the megalith-builders of South India and Sri Lanka’, Australian National University Press, Canberra, 1975. 
  5. தி.ஸ்ரீ.ஸ்ரீதர், இ.ஆ.ப., ‘தமிழக அகழாய்வுகள்’, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2008.