அதியமான் கோட்டை

    அமைவிடம் - அதியமான் கோட்டை
    ஊர் - அதியமான் கோட்டை
    வட்டம் - தர்மபுரி
    மாவட்டம் - தர்மபுரி
    வகை - கோட்டை
    தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் - கி.பி.12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி
    அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் - அதியமான் கோட்டை காலபைரவர் கோயில், அதியமான் கோட்டை சோமேசுவரர் கோயில், அதியமான் கோட்டை சென்னராயப் பெருமாள் கோயில்
    பாதுகாக்கும் நிறுவனம் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
    விளக்கம் -

              இராசராச அதியமான் என்பவன், 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தகடூர் நாட்டை ஆண்ட சிற்றரசன். சோழப் பேரரசின் கீழ் ஆட்சி செய்து வந்தான். இவன் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவன். சங்க காலத்துக் குறுநில மன்னர்களான அதியமான் மரபினரில் எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிற்றரசனாக அறியப்படும் முதல் மன்னன் இவனாவான். தகடூர்ப் பகுதியில் இவன் கோயில்களுக்குத் தானம் அளித்ததையும், திருப்பணிகள் செய்ததையும் குறிப்பிடும் பல கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.

              இப்போது அதியமான் கோட்டை என்று அழைக்கப்படும் இடத்தில் இருந்த கோட்டையைக் கட்டியவன் இராசராச அதியமானே எனக் கருதப்படுகிறது. தர்மபுரிப் பகுதியில் உள்ள மாட்லாம்பட்டி, இண்டமங்கலம் என்னும் ஊர்களுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட பழங்காலத்து வழித்தூரம் குறிக்கும் கற்கள் இரண்டு அதியமான் பெருவழி என்னும் சாலையில் இருந்த நாவல்தாவளத்துக்கான தூரத்தைக் குறிக்கின்றன. இக்கற்களும் இதே மன்னன் காலத்தவை எனப்படுகின்றன.

    ஒளிப்படம் எடுத்தவர் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
    ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
    சுருக்கம் -

              அதியமான் கோட்டை தருமபுரியில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோட்டையில் காலபைரவர் கோயில், சோமேசுவரர் கோயில், சென்னராயப் பெருமாள் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன. வழிவழியாக அதியமான் கோட்டை இருந்த இடமாக கூறப்பட்ட இடத்தில் 1981, 1982 ஆகிய ஆண்டுகளில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.

              இதில் சங்ககாலத்ததாக கருதப்படும் கறுப்பு-சிவப்பு பானை ஓடுகள், வண்ணம் பூசப்பட்ட பானை ஓடுகள், வில் அம்பு போன்ற கீறல்கள் உள்ள பானை ஓடுகள் கிடைத்தன. மேலும் சுடுமண் மணிகள், இரும்பு ஆணிகள், போன்றவையும் கிடைத்தன. இங்கு மேடையுடன் கூடிய கெட்டியான களிமண்ணால் அமைக்கப்பட்ட தரைப் பகுதியும் கண்டறியப்பட்டது. இவற்றின் காலம் கி.மு.100 முதல் 300 வரையிலான காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது. அதியமான் கோட்டை என்று அழைக்கப்படும் இந்த இடத்தில்தான் சங்க காலத்தில் இருந்து கோட்டை இருந்தது என்பதற்கு சான்றுகள் இல்லை.

              இங்குள்ள கோயில் கல்வெட்டுகளில் இந்த ஊர் மகேந்திர மங்கலம் என்றும் இவ்வூர் இறைவன் மயிந்தீசுவரமுடையார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கிராமத்தைச் சுற்றி முட்டை வடிவிலான கோட்டையின் எஞ்சிய பகுதியில் சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையினர் நடத்திய அகழாய்வில் இக்கோட்டை கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று முடிவு செய்தனர். இதன்படி பார்த்தால் பிற்கால சோழர் காலத்தில் இங்கிருந்து ஆண்டுவந்த இராசராச அதியமான் என்னும் அதியமான் மரபின் சிற்றரசன் காலத்தில் இக்கோட்டை கட்டப்பட்டிருக்கலாம் எனக்கருதப்படுகிறது.

    குறிப்புதவிகள் -
    1. இரா. இராமகிருட்டிணன், தகடூர் வரலாறும் பண்பாடும், பக். 122
    2. செ. சாந்தலிங்கம்,வரலாற்றில் தகடூர்,பக்.109-110