செஞ்சிக் கோட்டை

அமைவிடம் - செஞ்சி
ஊர் - செஞ்சி
வட்டம் - செஞ்சி
மாவட்டம் - விழுப்புரம்
வகை - கோட்டை
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் - கி.பி.13-ஆம் நூற்றாண்டு
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் - பனைமலை தாளகிரீஸ்வரர் கோயில், ஜம்பை அதியமான் கல்வெட்டு, அரசலாபுரம் கல்வெட்டு
பாதுகாக்கும் நிறுவனம் - இந்தியத் தொல்லியல் துறை
விளக்கம் - செஞ்சிக் கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது. செஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளடங்கியுள்ளது. 240 மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டுள்ளது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் உள்ளது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி அல்லது ராணிக்கோட்டை, சக்கிலிதுர்கம் அல்லது சந்திரகிரி, ராஜகிரி ஆகிய குன்றுகள் உள்ளன. இடையேயிருந்த வெளிகள் 20 மீட்டர்கள் அகலம் கொண்ட சுவர்களினால் மூடப்பட்டிருந்தன இராஜகிரியில் போர் முற்றுகைக்காலத்தில் எதிரிகள் உள்ளே நுழையாதவாறு தடுக்கும் இழுவைப்பாலம் உள்ளது, போர்காலத்தில் கோட்டைக் காவலர்கள் இந்த பாலத்தை அகற்றிவிடுவர் அப்போது எதிகள் உள்ளே நுழைய இயலாமல் திண்டாடுவர்.
ஒளிப்படம் எடுத்தவர் - காந்திராஜன் க.த.
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் - செஞ்சிக் கோட்டை இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் தப்பியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில், மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் அழைக்கப்பட்டது. இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைந்தது முக்கோண வடிவமாக அமைந்துள்ளது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது. சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் எனப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது. செஞ்சிக்கோட்டையை பல்லவர்கள் வழி வந்த காடவ மன்னன் செஞ்சியர் கோன் காடவன் கட்டியதாகவும், இடையர் குலத்தைச் சார்ந்த அனந்தக்கோன் என்பவர் கட்டியதாகவும் இருவேறு கருத்துகள் உள்ளன. செஞ்சியின் இரண்டு நூற்றாண்டுகள் வரலாற்றை கூறும் மெக்கன்சி சுவடித்தொகுப்புகளில் இது தொடர்பான பல தகவல்கள் உள்ளன. செஞ்சியின் வரலாறு பற்றி அதில் கிடைக்கும் கல்வெட்டுக்களின் அடிப்படையில் கி.மு. முதல் கி.பி 6 வரை இங்கு ஜைனர்கள் வாழ்ந்தனர் என்று கல்வெட்டுக்கள் சொல்கின்றன. பல்லவர் காலத்தில் சிங்கபுரதில் (சிங்கவரம்) ஒரு குகைகோவில் கட்டப்பட்டது, செஞ்சி தெற்கே பனமலை பகுதியில் ஒரு கோயில் கட்டப்பட்டது , அதன் பின்னர் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட குகை கோயில் உருவாக்கப்பட்டது , இந்த இடம் செஞ்சில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது , 580-630 பல்லவ மகேந்திரவர்மன் விசித்ரசித்தன் ஆக அழைக்க பட்டார், மேலும் பல்லவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கவரம் மற்றும் மேலச்சேரி பகுதிகளில் உள்ள பழங்கால கோயில் முலம் செஞ்சி பல்லவர்களின் ஆளுகையில் இருந்ததாகத் தெரிகிறது. செஞ்சி கிழக்கு பகுதில் காணப்படும் ஆனங்கூர் கல்வெட்டுக்களின் படி ராஜராஜன் சோழன் 1 (987-1014) காலத்தில் சிங்கபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது. கி.பி.1014-1190 காலங்களில் செஞ்சி பாண்டியர்களின் வசம் இருந்தது. கி.பி.13 - ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பெரரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. தமிழ் நாட்டில் நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் செஞ்சி நாயக்கர்களின் தலைமையிடமாகவும் இது விளங்கியது. மராட்டியர்களிடம் இருந்த இக் கோட்டையை பீஜப்பூர் சுல்தானின் படைகள் கைப்பற்றின. இக் கோட்டையை கி.பி 1677 இல் மீளக் கைப்பற்றிய(மீட்ட) மராட்டிய மன்னர் சிவாஜி இதனை மேலும் பலப்படுத்தினார். ஔரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்பின் போது மராட்டிய மன்னனாக இருந்த, சிவாஜியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராஜாராம் தப்பிச் செஞ்சிக் கோட்டைக்கு வந்து அங்கிருந்து முகலாயர்களுடன் போரிட்டான். முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோதும் ஏழு வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் 1698 ஆம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி விட்டான். பின்னர் இக் கோட்டை கர்நாடக நவாப்புக்களில் கைக்கு வந்தது. அவர்கள், 1750 இல் இதனை பிரெஞ்சுக்காரரிடம் தோற்றனர். இறுதியாக 1761 இல் பிரித்தானியர் இதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும் சிறிதுகாலம் இதனை ஹைதர் அலியும் கைப்பற்றி வைத்திருந்தான்.
குறிப்புதவிகள் - கோவிந்தசாமி, செஞ்சிக் கோட்டையின் வரலாறு, முத்துப் பதிப்பகம், 1985 , Chidambaram S. Srinivasachari, செஞ்சியின் வரலாறு, சந்தியா பதிப்பகம்