செங்கம்

அமைவிடம் - வேணுகோபால பார்த்தசாரதி கோயில், முன் மண்டபம்
ஊர் - செங்கம்
வட்டம் - செங்கம்
மாவட்டம் - திருவண்ணாமலை
ஓவியம் இருப்பிடம் - வேணுகோபால பார்த்தசாரதி கோயில், முன் மண்டபம்
ஓவியத்தின் பெயர் - இராமாயணம்
ஓவியத்தின் வகை - சுவரோவியம்
வண்ணம் - சிவப்பு, மஞ்சள், கருப்பு, வெள்ளை, பச்சை
ஆட்சி ஆண்டு - கி.பி.17-ஆம் நூற்றாண்டு, செஞ்சி நாயக்கர்
விளக்கம் -

          செஞ்சியை ஆண்ட நாயக்கர் மன்னரின் ஆதரவுடன் சுமார் 1600 -ஆம் ஆண்டு வேணுகோபால பார்த்தசாரதி கோயில்  கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இக்கோயிலின் முன் மண்டப கூரையில்  இராமயண தொடர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. ஓவியங்கள் மண்டப வெளிப்புற மண்டபத்தில் துவங்கி  மைய மண்டப கூரையில் முடிவடைகின்றது.  உள் மண்டபத்தைத் தவிர பிற பகுதிகளில் வரையப்பட்ட ஓவியங்கள் அதிக அளவில் அழிந்த நிலையில் உள்ளது.  இங்கு வரையப்பட்ட ஓவியங்களுக்கு அருகே அதற்கான விளக்கக்குறிப்பை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் எழுதப்பட்டுள்ளது.  வடக்கு பக்கத்தில்  உள்ள ஓவியங்களில் இலக்குவன் இந்திரசித்துடன் போரிடுவதும்,  சஞ்சீவி மலையைக் கொண்டு வருவதும், இந்திரஜித் நிகும்பலையாகம் செய்வதும் குறிப்பிடத்தக்கவையாகும். இராமன் – இராவண யுத்தம் கிழக்கு பக்கத்தில்  வரையப்பட்டுள்ளது.

          இங்கு இராவணனின் பாதாள ஹோமம்,   தவத்தைக் கலைத்த மண்டோதரியை வதம் செய்வது, வீபீடணுக்கு முடிசூட்டுவது போன்ற காட்சிகள் காட்டப்பட்டுள்ளன.  தெற்கு பக்கத்தில்  அசோக வனத்தில் சீதை இருப்பதும், இராமன் இராவணனை வென்ற செய்தியை அனுமன் சீதையுடம் கூறுவது முதல் அயோத்திக்கு செல்லும் வரையிலான காட்சிகள் தீட்டப்பட்டுள்ளன.  சீதையைப் பல்லக்கில் வைத்து தூக்கிவரும் காட்சி இசைக்கலைஞர்களுடன் காட்டப்பட்டுள்ளது.

          இவை அப்பகுதியில் அக்காலங்களில் இருந்த  இசை மரபை காட்டும் வண்ணம் உள்ளது.  சீதை தீக்குளிக்கும் காட்சி மிக உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு பகுதியில்  இராமர் –  சீதை பட்டாபிஷேக காட்சி  பிரமாண்டமாக வரையப்பட்டுள்ளது. இதில்  வானவர்கள், முனிவர்கள், வானரங்கள் ஆகிய உருவங்கள் அதிக அளவில் காணப்படுகின்றது.

சுருக்கம் -

          இராமாயண தொடர் ஓவியங்கள் தமிழகத்தில் வரையப்பட்டிருப்பினும் இங்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் விளக்கக் குறிப்புக்கள் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கவையாகும். மேலும் இப்பகுதி தெலுங்கு எல்லைப்பகுதியில் இருப்பதால் இவை தெலுங்கில் எழுதப்பட்ட இரங்கநாதர் இராமாயணத்தை அடிப்படையாக கொண்டு ஓவியன் தீட்டியிருப்பான் என அறிஞர்கள் கருதுகின்றனர்.

குறிப்புதவிகள் -
  1. ஐ. ஜோப் தாமஸ், ‘தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு’,(காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்(பி) லிட்.,2014, 2015. 
  2. முனைவர் இரா. நாகசாமி, ஓவியப் பாவை, (முதல் பதிப்பு 1979, இரண்டாம் பதிப்பு 2010 சென்னை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை. 
  3. Sathianatha Aiyar, History of the Nayaks of Madura , Madras, Oxford University Press, 1943. 
  4. Sewell, R.J.  A Forgotten empire, New Delhi, National Book Trust, 1961, 
  5. Sivaramamurti, C. South Indian Paintings  (New Delhi, National Museum, 1968),
  6. Srinivasachari, C.S. A History of Gingee and its Rulers, Annamalainagar, Annamalai University, 1943. 
  7. Krishnaswami, A.  The Tamil country under Vijayanagar ( Annamalainagar, Annamalai University, 1964).
  8. Natarajan B.   The City of Cosmic Dance (New Delhi, Orient Longman. 1974).
  9. Ramachandran. T.M.  Tiruparutikunram and its temples with appendices on Jaina units of measurement and time, cosmology and classification of souls, Bulletin of the Madras Government Museum, New Series-General section Vol 1, Pt. 3 (Madras, Government Press,1934).
  10. Sastri, K.A. Nilakanta,  A History of South India  (Madras, Oxford University Press, 1971).
  11. Vriddagrisan, V. The Nayaks of Tanjore (Annamalainagar, Annamalai University,1942).